ஷா ஆலம், ஜூன் 8- சிலாங்கூர் மாநில அரசினால் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட செலங்கா செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது 79 லட்சத்தை எட்டியுள்ளது.
தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்பதிவு செய்வது, இ-வாலட் எனப்படும் மின்னியல் முறையில் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக இந்த செயலியை பயனீட்டாளர்கள் பயன்படுத்துவதாக அதன் திட்ட இயக்குநர் டாக்டர் முகமது ஹெல்மி ஜக்காரியா கூறினார்.
நோய்த் தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நோக்கத்திற்காக இந்த செயலி தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆயினும், தற்போது மனநல ஆரோக்கியத் திட்டம், செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக இச்செயலி பயன்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
தற்போது இ-வாலட், மனநல ஆரோக்கியத் திட்டம், சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டம் ஆகியவற்றுக்கான இச்செயலின் பயன்பாடு சுமார் 75 விழுக்காடாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தவிர இந்த செயலியின் வாயிலாக ஆர்.டி.-பி.சி.ஆர். மற்றும் ஆர்.டி.கே.-ஏஜி போன்ற கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள முன்பதிவு செய்வதற்கும் இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
பொது மக்கள் தங்கள் வசம் உள்ள விவேக கைபேசிகளைப் பயன்படுத்தி ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோர் மூலம் செலங்கா செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.


