ECONOMY

கோவிட்-19 நோயாளிகளில் 184 பேருக்கு மட்டுமே கடும் பாதிப்பு- நோர் ஹிஷாம்

7 மார்ச் 2022, 9:32 AM
கோவிட்-19 நோயாளிகளில் 184 பேருக்கு மட்டுமே கடும் பாதிப்பு- நோர் ஹிஷாம்

கோலாலம்பூர், மார்ச் 7- நாட்டில் நேற்று பதிவான 27,435 நோய்த் தொற்று சம்பவங்களில் 184 மட்டுமே கடும் பாதிப்பைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எஞ்சிய 27,251 சம்பவங்கள்  நோய்க்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று அவர் சொன்னார்.

நேற்றைய புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 22 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட 184 கோவிட்-19 நோயாளிகளில் 55 பேர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்களாவர். மேலும் 85 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருப்பவர்கள். எஞ்சிய 44 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றவர்களாவர் என்றார் அவர்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்களில் 98 பேர் அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்றும் 64 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் மேலும் ஒருவர் கர்ப்பிணி என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக 1,756 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அவர்களில் 724 பேர் அல்லது 41.2 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் 1,032 பேர் அல்லது 58.8 விழுக்காட்டினர் லேசான நோய்த் தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.