ECONOMY

நாட்டில் நேற்றுவரை 62,809 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

10 பிப்ரவரி 2022, 6:24 AM
நாட்டில் நேற்றுவரை 62,809 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், பிப் 10- நாட்டில் நேற்று வரை 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 62,809 பேர் அல்லது 1.7 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இம்மாதம் 3 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இச்சிறார்களுக்கு எட்டு வார இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கால அவகாசம் நிர்ணயித்துள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று வரை 1 கோடியே 27 லட்சத்து 69 ஆயிரத்து 610 பேர் அல்லது 54.5 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்.

அதோடு 2 கோடியே 29 லட்சத்து 33 ஆயிரத்து 328 பெரியவர்கள் அல்லது 98 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், 2 கோடியே 32 லட்சத்து 8 ஆயிரத்து 714 பேர் அல்லது 99.2 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 93 ஆயிரத்து 710 பேர் அல்லது 88.8 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 28 லட்சத்து 71 ஆயிரத்து 310 பேர் அல்லது 91.3 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று 165,653 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதை அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன. அவற்றில் 14,195 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 2,097 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 149,361 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 44 லட்சத்து 34 ஆயிரத்து 353 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 9 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.