ECONOMY

கோவிட்-19 சுயபரிசோதனை கருவியின் உச்சவரம்பு விலை நவம்பரில் நிர்ணயிக்கப்படும்

8 அக்டோபர் 2021, 5:00 AM
கோவிட்-19 சுயபரிசோதனை கருவியின் உச்சவரம்பு விலை நவம்பரில் நிர்ணயிக்கப்படும்

புத்ரா ஜெயா, அக் 8- கோவிட்-19 சுயபரிசோதனை கருவியின்  மொத்த மற்றும் சில்லறை  உச்ச வரம்பு விலையை அரசாங்கம் வரும் நவம்பர் மாதம் நிர்ணயிக்கும்.

அந்த உபகரணத்திற்கான மொத்த மற்றும் சில்லறை உச்ச வரம்பு விலையை நிர்ணயிப்பதற்கு முன்னர் உற்பத்தித் துறை நிலையிலான மதிப்பீட்டை உள்நாட்டு வாணி மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

உற்பத்தித் துறையினரிடமிருந்து பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலான விலையை அமைச்சு பெற்றுள்ளதாக கூறிய அவர், அந்த கருவிகளின் விநியோகம் தொடர்ச்சியாகவும் போதுமான அளவிலும் இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்றார்.

தற்போது 60 லட்சம் கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகள் சந்தையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னதாக, ஆண்டிஜென் விரைவு கோவிட்19 சுயபரிசோதனைக் கருவிகளுக்கான சில்லறை விலையை வெ. 19.90 ஆகவும் மொத்த விலையை வெ. 16.00 ஆகவும் நிர்ணயித்திருந்தது. இந்த புதிய விலை செப்டம்பர் 5 ஆம் தேதி அமலுக்கு வருவதாகவும் அது குறிப்பிட்டிருந்தது.

மாநில எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்பட்டவுடன் பொதுமக்கள் சுயமாக கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஆண்டிஜென் விரைவு சோதனைக் கருவியின் விலை விரைவில் குறைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அண்மையில் கூறியிருந்தார்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.