ஷா ஆலம், செப் 23- கோவிட்-19 தடுப்பூசியை பெற மறுக்கும் காஃபா எனப்படும் சமயப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிவாசல் அதிகாரிகள் மற்றும் திருமண பதிவாளர்களுக்கு சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை ஆலோசக சேவையை வழங்கியது.
சமபந்தப்பட்டவர்கள் தடுப்பூசி பெறுவதை ஊக்குவிப்பதற்காக சுமார் அரை மணி நேரத்திற்கு இந்த ஆலோசக சேவை வழங்கப்பட்டதாக இந்த ஆலோசக சேவைக்கு பொறுப்பேற்றுள்ள சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகாவின் தடுப்பூசி முன்னிலை திட்டத்தின் பொறுப்பாளர் நோராய்னி அகமது ஜாக்கி கூறினார்.
இந்த ஆலோசக சேவையை பெற வந்தவர்களில் பலர் தடுப்பூசியைப் பெறுவதற்கு இன்னும் தயாராகவில்லை என்று அவர் சொன்னார்.
அவர்களில் ஒரு சிலர் ஃபைசர் தடுப்பூசி தவிர்த்து இதர வகை தடுப்பூசிகளை தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். அவர்களின் கருத்துகளை நாங்கள் கேட்டறிந்ததோடு அவர்களுக்கு உரிய முறையில் உதவுவதற்கும முயற்சி மேற்கொள்வோம் என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்தில் காஃபா சமயப் பள்ளி ஆசிரியர்கள் உள்பட 96 பேர் தடுப்பூசி பெற மறுப்பது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் நேற்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
இத்தரப்பினரின் பிடிவாதப் போக்கு பொதுமக்களுக்கு குறிப்பாக காஃபா பள்ளிகளில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.








