HEALTH

சிலாங்கூரில் முழு பொது முடக்கம் வேண்டாம்- எஸ்.டி.எப்.சி. வலியுறுத்து

19 மே 2021, 11:07 AM
சிலாங்கூரில் முழு பொது முடக்கம் வேண்டாம்- எஸ்.டி.எப்.சி. வலியுறுத்து

ஷா ஆலம், மே 19- சிலாங்கூர் மாநிலத்தில் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்ய வேண்டாம் என சிலாங்கூர் மாநில கோவிட்-19 பணிக்குழு (எஸ்.டி.எப்.சி.) மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

அதற்கு பதிலாக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வதன் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றை ஆக்ககரமான முறையில் கட்டுப்படுத்த முடியும் என அது கூறியது.

சிலாங்கூரில்  முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்யும் முடிவை புத்ரா ஜெயா மறு ஆய்வு செய்யும் எனத் தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாக அந்த பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

மாநிலத்தில் அன்றாட கோவிட்-19 சம்பவங்களை அடிப்படையாக கொண்டு நிலைமையே மத்திய அரசு மதிப்பீடு செய்யக்கூடாது. 69 லட்சம் மக்கள் தொகையையும் அதிக தொழில்துறைகளையும்  கொண்ட மாநிலமாக இது விளங்குவதையும் அது கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கோவிட்-19 சம்பவங்களைக் பொறுத்த வரை கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக சிலாங்கூரை வகைப்படுத்த முடியாது. மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டால் சபா, கோலாலம்பூர், சரவா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த நிலையில்தான் சிலாங்கூர் உள்ளது என அவர் தெளிவுபடுத்தினார்.

அதே சமயம்,  நோய்த் தொற்று பரவல் சம்பவங்களும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிலாங்கூரில் குறைவாகவே உள்ளது. ஆகவே, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தினால் பாதிக்கப்படும் மக்கள் குறிப்பாக சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்தும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.