ஷா ஆலம், மே 19- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்க காலத்தில் ஸ்மார்ட் சிலாங்கூர் எனப்படும் இலவச பஸ் சேவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாறாக, அனைத்து 50 தடங்களிலும் பஸ் சேவை வழக்கம் போல் மேற்கொள்ளப்படுகிறது.
மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்த போதிலும் பொதுமக்கள் இந்த இலவச பஸ் சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக போக்குவரத்து துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
172 பஸ்களை உள்ளடக்கிய 50 தடங்களுக்கான பஸ் சேவை வழக்கம் போல் மேற்கொள்ளப்படுகிறது. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பிஜே சிட்டி பஸ் மற்றும் எஸ்ஏ09 சேவையும் அதில் அடங்கும் என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக பஸ்சில் பயணம் செய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முறையாக பின்பற்றும்படி பயணிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த பஸ் சேவையை பயன்படுத்துவோர் ஸ்கேன் டு ரைட் எனும் முறையைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக செப்பாட் எனும் செயலியை பதிவுறக்கம் செய்து கொள்ளும்படியும் அவர் வலியுறுத்தினார்.








