ஷா ஆலம், மே 7- நோய்த் தொற்று தொடர்பை கண்டறிய உதவும் செலங்கா செயலி புதிய அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
செலங்கா ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி ‘மல்டி ஸ்கேனர்‘, ‘பப்பள்ஸ்‘, ‘ஏஎஃப்மேப்‘ ஆகிய செயலிகள் அதில் இணைக்கப்பட்டுள்ளன.
மைசெஜாத்ரா உள்பட எந்த கியூ.ஆர், குறியீட்டையும் ஸ்கேன் செய்யும் ஆற்றலை மல்டி ஸ்கேனர் கொண்டுள்ளது. தனிநபர்களின் விபரங்களை ஏகாலத்தில் ஸ்கேன் செய்யவும் சோதனை செய்யவும் கூடிய திறனை இது கொண்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட மூன்று பிரிவினரை உள்ளடக்கிய குழுவினரின் தகவல்களை உள்ளிடும் வசதியை பப்ள்ஸ் செயலி கொண்டிருக்கிறது.
நாம் இருக்கும் இடத்தின் நோய்த் தொற்று அபாய நிலை குறித்த தகவல்களை ஏஎஃப்மேப் செயலி தரும். அடுத்த 14 நாட்களுக்கு நோய்த் தொற்று அபாயம் அதிகம் இருக்கும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளின் வரைபடத்தையும் அது காட்டும்.
நோய்த் தொற்று காலத்தில் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் நோக்கில் கடந்தாண்டு மே மாதம் 5ஆம் தேதி இந்த செலங்கா செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.


