அம்பாங், மார்ச் 29- இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் வாயிலாக வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் 50,000 பேருக்கு அச்சோதனையை மேற்கொள்ள முடியும் கிளினிக் செல்கேர் நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்காக அடுத்த ஆறு மாத காலத்திற்கு இந்த பரிசோதனை இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரிசோதனை இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு வட்டார தலைவர்கள் மற்றும் குடியிருப்பாளர் சங்கங்கள் மூலம் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். இது தவிர நடப்பிலுள்ள பிரசார வியூகங்களையும் மேம்படுத்தவுள்ளோம் என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு விட்ட போதிலும் இலவச பரிசோதனை இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். குறிப்பாக தடுப்பூசியை பெற்றவர்கள் குறைவாக உள்ள பகுதிகளை மையமாக கொண்டு இந்த பரிசோதனை இயக்கத்தை நடத்தவிருக்கிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.
கம்போங் பாண்டானில் உள்ள அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தொடங்கி இதுவரை சுமார் எட்டாயிரம் பேர் கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








