ஷா ஆலம், மார்ச் 12- தேசிய தடுப்பூசித் திட்டத்தின் முதல் கட்டமாக அதிக தடுப்பூசி பெற்றவர்கள் பட்டியலில் சிலாங்கூர் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. நேற்று வரை மாநிலம் முழுவதும் 29,208 பேருக்கு அந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் பெற்றவர்கள் குறித்து மாநில வாரியாக வெளியிட்டப்பட்ட பட்டியலில் இரண்டாவது இடத்தில் சரவா மாநிலம் உள்ளது. இம்மாநிலத்தில் 28,212 பேர் இதுவரை தடுப்பூசி பெற்றுள்ள வேளையில் 25,190 பேருடன் கோலாலம்பூர் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் நேற்று வரை 249,909 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தனது டிவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா முதல் கட்டமாக 312,390 பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை கடந்த மாதம் 21ஆம் தேதி பெல்ஜியத்திலிருந்து பெற்றது. அவற்றில் 78,000 தடுப்பூசிகள் சிலாங்கூர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டன.
அந்த தடுப்பூசிகளை மூன்று கட்டங்களாக முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.








