ECONOMY

முன்களப் பணியாளர்கள் பிள்ளைகளுக்கான பராமரிப்புச் சேவையைத் தொடர சிலாங்கூர் அரசு தயார்

19 பிப்ரவரி 2021, 7:01 AM
முன்களப் பணியாளர்கள் பிள்ளைகளுக்கான பராமரிப்புச் சேவையைத் தொடர சிலாங்கூர் அரசு தயார்

ஷா  ஆலம், பிப் 19- முன்களப் பணியாளர்களின் பிள்ளைகளை பராமரிக்கும் தற்காலிக அடிப்படையிலான திட்டத்தை தொடர்வதற்கு மாநில அரசு தயாராக உள்ளது. எனினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தின் நடப்பு நிலவரத்தைப் பொறுத்து இதன் தொடர்பில் முடிவெடுக்கப்படும்.

முன்களப் பணியாளர்களின் பிள்ளைகளை பராமரிப்பதற்கான தற்காலிக திட்டம் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி தொடங்கி மார்ச் மாத இறுதி வரை அமலில் இருக்கும் என்று எம்.பி,ஐ. எனப்படும்  மந்திரி புசார் கழகத்தின் தலைமை செயல் முறை அதிகாரி நோரித்தா முகமது சீடேக் கூறினார்.

கடந்தாண்டு முதல் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த சிறார் பராமரிப்புத் திட்டத்தை தொடர்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவர்கள் என்ற முறையில் முன்களப் பணியாளர்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. அவர்கள் தங்கள் பணியில் முழுமையாக ஈடுபடுவதற்கு ஏதுவாக வேண்டிய உதவிகளை செய்வது நமது கடமையாகும் என்றார் அவர்.

இங்குள்ள டாருள் ஏசான் கட்டிடத்தில் அமைந்துள்ள முன்களப் பணியாளர்களின் பிள்ளைகள் பராமரிப்பு மையத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்,

அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 12  தஸ்கா எனப்படும் சிறார் பராமரிப்பு மையங்களில் சிறார்களின் தேவைக்கு ஏற்றவகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி தவிர்த்து சிறார்களின் மேம்பாட்டிற்கு உதவக் கூடிய பல்வேறு நடவடிக்கைகள் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கேற்ப இங்கு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சொன்னார்.

சுமார் 400 முன்களப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு தற்காலிக அடிப்படையில் பராமரிக்கும் பணிக்காக மாநில அரசு கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் கீழ் பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.