ஷா ஆலம், டிச 27- நாடு முழுவதும் உள்ள கைவிடப்பட்ட நிலங்களை மாடு வளர்ப்பு மற்றும் பால் பண்ணைகளாக மாற்றுவதன் மூலம் ஆக்ககரமான பயனைக் கொண்டு வர முடியும் என்று ஹலால் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
இந்நடவடிக்கையின் மூலம் இறைச்சிக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் போக்கை தவிர்க்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
இறைச்சிக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் போக்கை நாம் உடனடியாக குறைக்க வேண்டும். ஹலால் உணவுத் தொழில்துறை தொடர்பில் புதிய கொள்கைகளை வகுப்பதன் மூலம் உள்நாட்டு ஹலால் இறைச்சி வளங்களை நாம் மேம்படுத்த முடியும் என்றார் அவர்.
நாட்டிலுள்ள கைவிடப்பட்ட நிலங்களை பெரிய அளவில் கால்நடை வளர்ப்புமையங்களாக உருவாக்கினால் முன்னணி உள்நாட்டு ஹலால் உணவுப் பொருள் உற்பத்தியாளராக நாம் மாற முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு தொழில்முனைவோரைக் கொண்டு விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போதுமான அளவு வளங்கள் இருந்தும் இத்தகைய தரப்பினருக்கு உரிய உதவிகளை நாம் வழங்காவிட்டால் அதனால் நமக்குதான் இழப்பு ஏற்படும் எனவும் அவர் சொன்னார்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை சீனா, உக்ரேன், பிரேசில், அர்ஜெண்டினா போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்து ஜோகூர், செனாயில் உள்ள கிடங்கு ஒன்றில் ஹலால் முத்திரையுடன் பொட்டலமிடும் நடவடிக்கையில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் அண்மையில் அம்பலப்படுத்தின.








