ஷா ஆலாம், செப்.16 — காஜாங் நகராண்மைக் கழகம் (MPKj) மாநகர் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவதற்கு முன்னதாக, குடியிருப்பாளர்களின் நீண்டகாலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதில் போக்குவரத்து நெரிசல், சாலை சேதம் மற்றும் கட்டுப்பாடின்றி திரியும் நாய்கள் உள்ளிட்ட பிரச்சனைகளும் அடங்கும்.
மாநகர அந்தஸ்துக்கு மாறுவதற்கான பணிகளில் MPKj தற்போது சுமார் 80 விழுக்காடு தயாராக இருப்பதாக MPKj பிரிவு 19 சட்டமன்ற உறுப்பினர் சங்கீதா சந்திர மோகன் தெரிவித்தார்.

எஞ்சியுள்ள 20 விழுக்காடு பணிகளில் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதும் சேவைகளை மேம்படுத்துவதும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநகர அந்தஸ்து வழங்கப்பட்டு, வரி விகிதங்களும் அதிகரிக்கும் நிலையில், MPKj வழங்கும் சேவைகளின் தரம் குறித்த பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அதிகரிக்கும்.
அதனால், தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு முதலில் முறையான திட்டமிடலுடன் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் கூறினார்.
காஜாங் இன்னும் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகளுக்குள் மாநகர் அந்தஸ்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகத் உள்ளூராட்சி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
அவ்வாறு அந்தஸ்து வழங்கப்பட்டால், சிலாங்கூரின் ஐந்தாவது மாநகரமாக காஜாங் உருவெடுக்கும்.
மாநகர அந்தஸ்து கிடைப்பதன் மூலம் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
அதன் வாயிலாக உள்கட்டமைப்பு மற்றும் நிலப்பரப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகளை மேற்கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த MPKj-க்கு உதவியாக இருக்கும் என்றும் சங்கீதா தெரிவித்தார்.







