கோத்தா பாரு, செப்.13 — தெலிப்போட்டில் உள்ள உணவகத்தில் ஆடவர் ஒருவர் சிறுமியைக் கடுமையாக உதைப்பதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடவர் சிறுமியின் தந்தையாக இருக்கலாம் என நம்பப்படும் நிலையில் அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று இரவு 10.24 மணியளவில் பொதுமக்களிடமிருந்து போலீசாருக்குப் புகார் கிடைத்ததாக கோத்தா பாரு மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் அஸ்மிர் டாமிரி தெரிவித்தார்.
அந்தக் காணொளியை சம்பந்தப்பட்ட வளாகத்தின் உரிமையாளர் தனது முகநூல் கணக்கில் பதிவேற்றியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் சட்டம் 2001-ன் செக்ஷன் 31(1)(a)-இன் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவ இன்ஸ்பெக்டர் நூர் ஃபராஹீன் அஸ்மான் லிம்மை 011-11136722 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.







