ஷா ஆலாம், ஜூலை 24 — ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளிக்கு முன் 16 வயது மாணவரும் அவரது தந்தையும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சமூக வலைதளங்களில் காணொளி வைரலானதைத் தொடர்ந்து சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் தடுப்புக் காவல் (Reman) ஆணை பெறுவதற்காக இன்று பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று செர்டாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஃபரித் அகமத் தெரிவித்தார்.
சில மாணவர்களுக்கும், அவற்றில் ஒரு மாணவரின் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல் குறித்து காவல்துறைக்கு புகார் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி மதியம் 12.45 மணியளவில், பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளிக்கு வெளியே தனது மோட்டார் சைக்கிளை நோக்கிச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
“பாதிக்கப்பட்ட மாணவரை அதே பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்கள் கூப்பிட்டு, பின்னர் அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளனர்” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் அம்மாணவரின் உதடு மற்றும் முழங்கால்களில் காயங்கள் ஏற்பட்டதோடு, உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. தனது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் தாக்கப்பட்டு சாலையில் தள்ளிவிடப்பட்டதில், அவருக்கும் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இச்சம்பவத்தை சட்டப்படியும் தொழில்முறை சார்ந்தும் கையாள காவல்துறை பள்ளி நிர்வாகத்துடனும் பெற்றோர்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாகக் கலகம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகம் சட்டம் 1998-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.







