புத்ராஜெயா, செப்.13 — புத்ராஜெயா பிரிசிங்க் 5-இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்த பதின்ம வயது பெண் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அந்தப் பெண் கட்டிடத்தின் உயரமான இடத்திலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று இரவு 10.33 மணியளவில் போலீசாருக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகப் புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மருத்துவ அதிகாரி, அப்பெண் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்ததாக அவர் கூறினார்.
உயிரிழந்த பெண் தனது குடும்பத்தினருடன் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் வசித்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.







