புதுடெல்லி, செப்.13 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆகியோருக்கிடையே திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு, இரு தரப்பினரின் நேர அட்டவணைகள் ஒத்துப்போகாத காரணத்தால் நடைபெறவில்லை.
இதனை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாததால், சந்திப்பை ஏற்பாடு செய்ய முடியாமல் போனதாக அவர் விளக்கமளித்தார்.
இந்தியாவில் பிரதமர் அன்வாரின் பணிப்பயணம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர் தொடர்ந்து கேராளாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் செப்டம்பர் 14 முதல் 15ஆம் தேதி வரை மாலத்தீவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், பின்னர் மலேசியா திரும்பி மலேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகவும் ரமணன் தெரிவித்தார்.
இதனிடையே, பிரதமர் அன்வார் மற்றும் தமிழக முதலமைச்சருக்கிடையிலான சந்திப்பு தொடர்பாக வெளியாகியுள்ள பல்வேறு ஊகங்களை பெரிதுபடுத்திப் பார்க்க வேண்டாம் என்றும் ரமணன் கேட்டுக்கொண்டார்.
உயர்மட்டத் தலைவர்களின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல்களில் நேர அட்டவணை மாறுபாடுகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றே என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, திட்டமிடப்பட்ட சந்திப்பு நடைபெறாத விவகாரத்தை இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு அல்லது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையாகக் கருத வேண்டிய அவசியமில்லை என ரமணன் தெரிவித்துள்ளார்.







