ஷா ஆலாம், செப். 12: தஞ்சோங் செப்பாட், பந்தாய் பத்து லாவுட் பகுதியில் எதிர்வரும் செப்டம்பர் 16 முதல் 20ஆம் தேதி வரை சிலாங்கூர் கலாச்சார விழா நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ‘மிதக்கும் சந்தை’ எனப்படும் Floating Market முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக இடம்பெறவுள்ளது.
நெகாரா கலாச்சார மற்றும் கலைத் துறையின் (JKKN) சிலாங்கூர் கிளையால் ஏற்பாடு செய்யப்படும் இந்த ஐந்து நாள் விழா, தினமும் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும்.
பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் பல்வேறு கலை, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் விழா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக JKKN தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
அவற்றில், சமூக ஊடகங்களில் அதிகமான பகிர்வுகள், விருப்பங்கள் பெறும் புகைப்படங்களுக்குப் பரிசு வழங்கப்படும் புகைப்படப் போட்டியும் இடம்பெறுகிறது.
இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் RM1,000 பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
இதனிடையே, இந்திய உணவு வகைகள் தொடர்பான சமையல் போட்டி, சிலாங்கூரின் பல்வேறு இனங்களின் பாரம்பரிய உணவுகளை சமைக்கும் செயல்விளக்கம் மற்றும் உணவு விற்பனை உள்ளிட்டவையும் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக இடம்பெறுகின்றன.
மேலும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெறவுள்ளன.
மேலும், உள்ளூர் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சார மரபுகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதுடன், சிலாங்கூரின் தனித்துவமான கலாச்சார அடையாளத்தைப் பொதுமக்களிடையே மேலும் வலுப்படுத்துவதற்கான தளமாகவும் இந்த விழா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.







