ஷா ஆலாம்,செப் 9: இந்த ஆண்டின் 35-வது தொற்று நோயியல் வாரம் (Epidemiological Week) வரை, நாடு முழுவதும் டெங்கி பாதிப்புகள் 66 விழுக்காடு அதிகரித்து 65,979 சம்பவங்களாகப் பதிவாகின.
கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 39,616 -ஆக இருந்தது.
டிங்கி பாதிப்பினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் 93.8 சதவீதம் அதிகரித்து 62 மரணங்களாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 32 மரணங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன என அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
டெங்கி பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள், குறிப்பாக சிவப்பு மண்டலங்கள் (Zon Merah) மற்றும் டிங்கி பரவல் அதிகமாக உள்ள இடங்களில் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதை இது காட்டுவதாக அவர் கூறினார்.
புஞ்சா ஜெயா (Punca Jaya) உட்பட பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வொல்பாக்கியா (Wolbachia) கொசு இனப்பெருக்கத் திட்டத்தின் சாதனைகள் குறித்தும் அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்பட்டதாக ஃபஹ்மி கூறினார்.
வொல்பாக்கியா பாக்டீரியா கொண்ட கொசுக்கள், டெங்கி வைரஸ் உருவாவதைத் தடுத்து, ஏடிஸ் (Aedes) கொசுக்கள் நோயைப் பரப்பும் திறனைக் குறைக்க உதவுகின்றன.
இருப்பினும், இரசாயனப் புகை அடித்தல் (Fogging) நடவடிக்கைகள் வொல்பாக்கியா கொசுக்களையும் அழித்துவிடும் என்பதால், அவை மிகவும் கவனமாகச் செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
எனவே, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிப்பதற்காகப் பெரிய அளவிலான கோத்தோங்-ரோயோங் கூட்டுப்பணி நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றாரவர்.






