கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - சிலாங்கூரில் பெட்டாலிங், கிள்ளான் ஆகிய இரு மாவட்டங்கள் தொடர்ந்து அதிகமான டெங்கி சம்பவங்கள் பதிவாகும் இடங்களாக நீடிப்பதாக, பொது சுகாதார-சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
டெங்கி பாதிப்புகள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
சமீபகாலமாகப் பாதிப்புகள் அதிகரித்து வருவதற்குப் பருவநிலை மாற்றங்களும், மிக எளிதாகப் பரவக்கூடிய புதிய டெங்கி உருமாறிய வைரஸ் உருவெடுத்துள்ளதும் முக்கியக் காரணங்களாகும் என்று ஜமாலியா ஜமாலுதீன் மீடியா சிலாங்கூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
"நாம் ஒரு மாறுபட்ட பருவநிலைக்குள் நுழைந்துள்ளதால் பாதிப்புகள் அதிகரித்துள்ளன, மேலும் இந்த புதிய உருமாறிய வைரஸ் மிக விரைவாகப் பரவ வழிவகுத்துள்ளது," என்று கூறினார்.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, மலேசியாவிலேயே சிலாங்கூர் மாநிலம் தான் தொடர்ந்து அதிக டெங்கி பாதிப்புகளைக் கொண்டுள்ளது.
இம்மாநிலத்தில் ஜனவரி முதல் ஜூலை 9 வரை 19,313 பாதிப்புகள் பதிவாகின.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 43.2 சதவீதம் அதிகமாகும்.
மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 5 மரணங்கள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டு டெங்கி தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாண்டு பாதிப்புகள் அதிகரித்திருப்பதற்கான காரணங்களில் 'DEN-3' என்ற டெங்கி வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதும் ஒன்றாகும் என்றும், இந்த குறிப்பிட்ட வைரஸ் வகைக்கு எதிராகப் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதனால் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளது என்றும் ஜமாலியா குறிப்பிட்டார்.
இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், சிலாங்கூர் அரசு இவ்வாண்டு விழிப்புணர்வு திட்டங்கள், சமூகத் துப்புரவுப் பணிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளின் நடவடிக்கைகளுக்காக கிட்டத்தட்ட RM4 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.







