கோலாலம்பூர், செப் 6 : மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் பாத்திக் ஏர் ஆகிய நிறுவனங்கள் மலேசியாவிற்கும் ஜகார்த்தாவிற்கும் இடையிலான 20 விமானச் சேவைகளை இன்று ரத்து செய்தன.
அனக் கிராகாதாவ் (Anak Krakatau) எரிமலை வெளியேற்றிய சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவின் சுகர்ணோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
அதையடுத்து, மலேசியா ஏர்லைன்ஸ் தனது 'X' பக்கத்தில், கோலாலம்பூர் மற்றும் ஜகார்த்தா இடையே இயக்கப்படும் 12 விமானச் சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்தது.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்: MH713, MH712, MH711, MH710, MH717, MH716, MH721, MH720, MH723, MH722, MH7245 மற்றும் MH725 ஆகும்.
நிலைமை சீரற்றதாக இருப்பதால், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் உடனுக்குடன் தகவல்கள் வழங்கப்படும் என்றும் தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
இதற்கிடையில், பாத்திக் ஏர் (Batik Air) நிறுவனம் மலேசியாவிற்கும் ஜகார்த்தாவிற்கும் இடையே இன்று இயக்கவிருந்த 8 விமானச் சேவைகளை ரத்து செய்தது.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்: OD398, OD399, OD346, OD347, OD388, OD389, OD390 மற்றும் OD391 ஆகும்.
இதில் 6 விமானங்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்தும் (KLIA), 2 விமானங்கள் சுபாங் (Subang) விமான நிலையத்திலிருந்தும் புறப்படவிருந்தவை ஆகும்.
பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களின் பயணத்தை மற்றொரு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறக் கோரலாம் என பாத்திக் ஏர் அறிவித்தது.






