கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 - மலேசியாவின் தேசிய விமான நிறுவனமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் முயற்சியில் கைது செய்யப்பட்ட விவகாரம், கே.எல்.ஐ.ஏ-வின் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகளில் உள்ள பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகப் விமானப் போக்குவரத்து நிபுணர் எச்சரித்துள்ளார்.
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் கண்டறிதல் திட்டத்தின் செயல்திறனை மறுஆய்வு செய்ய இச்சம்பவம் மலேசியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அதிகாரிகளுக்கு ஒரு முக்கிய உந்துதலாக இருக்க வேண்டும் என்று இணைப் பேராசிரியரான டாக்டர் முகம்மது ஹரிடூன் முகமட் சுஃபி யான் வலியுறுத்தினார்.
கைது செய்யப்பட்ட அந்த விமானி போதையில் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும், விமானப் போக்குவரத்தில் பாதுகாப்பு எப்போதும் முதன்மையானது என்பதால் இது முற்றிலும் ஒரு பாதுகாப்புப் பிரச்சனை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய கண்காணிப்பு வழிமுறைகள் மூலம் விமானக் குழுவினர் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளிட்ட விமானப் பணியாளர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு கண்டறியப்படாமல் போயிருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து, இந்தத் தவறுகள் எவ்வாறு நிகழ்தன என்பது குறித்து மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனடியாக ஒரு முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து தொழில்நுட்பக் குழுவினர், விமானப் பணிப்பெண்கள், பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கான போதைப்பொருள் பரிசோதனைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இத்தகைய சம்பவங்கள் விமான நிலையத்தின் பாதுகாப்பு தரநிலைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைப்பதுடன், ஒரு பன்னாட்டு விமானப் போக்குவரத்து மையமாக மலேசியாவின் நற்பெயரையும் பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், மலேசிய ஏர்லைன்ஸ், மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் பெர்காட், மலேசிய குடிமைத் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட முகாம்கள் இணைந்து தற்போதைய நெறிமுறைகள், விதிமுறைகள் மற்றும் அமலாக்க நடைமுறைகளை மறுஆய்வு செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஹரிடூன் கோரிக்கை விடுத்தார்.






