கோலாலம்பூர், ஆகஸ்ட் 30: கடந்த புதன்கிழமை நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் மூன்று மலேசிய மலையேறிகளும் காணாமல் போயுள்ளனர்.
அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் காத்திருக்கின்றனர்.
அவர்கள் 27 வயதான முகமட் முஹைமின் அஸ்ஹாட் நோர் ஹாடி, 27 வயதான முகமட் அடிப் ஹைக்கல் அவாங் மன்சோர் மற்றும் 29 வயதான முகமட் ஸாக்கி ஒத்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
‘emyliatahar’ என்ற பயனர் வெளியிட்ட பதிவில், இச்சம்பவம் நடைபெற்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி மலேசிய நேரப்படி காலை 10.42 மணியளவில் அவர்களிடமிருந்து கடைசியாக தகவல் கிடைத்துள்ளது.
அவர்கள் கடைசியாக ப்ஹோட்டே கோஷி (Bhote Koshi) பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூவரும் காணாமல் போனது தொடர்பாக நேபாளத்திலுள்ள மலேசியத் தூதரகம் மற்றும் விஸ்மா புத்ராவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.







