கோலாலம்பூர், ஆகஸ்ட் 29: நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் புகைமூட்டம் காரணமாக காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இதில் ஆஸ்துமா பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு (KKM) தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 23 முதல் 29ஆம் தேதி வரையிலான 34ஆவது தொற்றுநோயியல் வாரத்தில் (ME34), மொத்தம் 1,811 ஆஸ்துமா சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது முந்தைய தொற்றுநோயியல் வாரத்தில் பதிவான 219 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் எட்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதனிடையே, கண் தொடர்பான உபாதைகளும் அதிகரித்துள்ளன. கடந்த வாரத்தில் 146 சம்பவங்கள் மட்டுமே பதிவான நிலையில், இந்த வாரம் அந்த எண்ணிக்கை 720 சம்பவங்களாக அதிகரித்துள்ளது.
புகைமூட்டத்தால் எந்தவொரு மரணச் சம்பவமும் இதுவரை பதிவாகவில்லை. இருப்பினும், நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாட்டில் காலை 8 மணி நிலவரப்படி, மொத்தம் 30 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தர நிலை பதிவாகியுள்ளன.
பொதுமக்கள் குறிப்பாக அதிக ஆபத்துள்ள பிரிவினரான குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வெளிப்புறங்களில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், முகக்கவசத்தை அணிந்துகொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மூச்சுத்திணறல், தொடர்ந்து நீடிக்கும் இருமல் அல்லது கண்களில் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், பொதுமக்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள சுகாதார நிலையத்துக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.







