ஜெனீவா, ஆகஸ்ட் 28: நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம், UNICEF தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் ராசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் மாவட்டங்களை கடந்த 26ஆம் தேதி தாக்கிய திடீர் வெள்ளத்தில் குறைந்தது 17 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக UNICEF கூறியுள்ளது.
வெள்ளத்தில் இருந்து உயிர் தப்பிய குழந்தைகள் தற்போது பல்வேறு ஆபத்துகளை எதிர்கொண்டு வருவதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. குறிப்பாக தொற்றுநோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, வன்முறை மற்றும் சுரண்டலுக்கு அவர்கள் ஆளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ள போதேகோஷி ஆற்றில் கடந்த புதன்கிழமை திடீரென ஏற்பட்ட கடும் நீர்ப்பெருக்கே இந்தப் பேரழிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, நேபாளத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.







