ஷா ஆலம்,ஆகஸ்ட் 27: மனித இயந்திர தொலையியக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஜெனரேட்டிவ் தொழில்நுட்பங்களின் திறனைக் கற்பதின் வாயிலாக, ஒருவர் வேலைக்கான தங்களது வாய்ப்பினை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும்.
அதே வேளை, அத்தொழில் திறன் சிலாங்கூரில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குமென மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி.பாப்பாராய்டு தெரிவித்தார்.
மாறிவரும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை சூழலுக்கு ஏற்ப பணியாளர்கள் தொழில்நுட்பத் திறன்களைக் கற்று தங்களைத் தயார்படுத்திக்கொள்வது அவசியமென அவர் கூறினார்.

மேலும் டிஜிட்டல் மாற்றத்தை தொழிலாளர்கள் ஓர் அச்சுறுத்தலாகக் கருதாமல், அத்திறன்களைக் கற்று உயர் உற்பத்தித் திறன் கொண்ட பணியாளர்களாக தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மனிதவள மேம்பாட்டு மையத்தில் (SHRDC) நேற்று நடைபெற்ற மனித இயந்திர தொலையியக்கத் தொழில்நுட்பத் திறன் மற்றும் AI ஜெனரேட்டிவ் தொழில்நுட்பத் திறன் பயிற்சித் திட்டங்களின் நிறைவு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
மாநில அரசின் முழு நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இந்த இரு பயிற்சித் திட்டங்களிலும் மொத்தம் 80 பேர் பங்கேற்றனர்.

தற்போதைய வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரசு, பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தரப்பினருக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று பாப்பாராய்டு கூறினார்.
அதே வேளை , பங்கேற்பாளர்கள் தொடர்ந்து கற்றல், மற்றும் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தொழில்துறையின் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இதன் மூலம் தொழில்நுட்பத்தை ஆராயவும், புதியவற்றை முயற்சிக்கவும் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளக்கூடிய புதிய தலைமுறை பணியாளர்களை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.







