தாப்பா, ஆகஸ்ட் 26: நாடு முழுவதும் பழமையான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை மறுசீரமைக்க 2023 முதல் 2026ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 367 திட்டங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக RM 900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் 86 திட்டங்களுக்கு RM1.711 பில்லியனும், 2024ஆம் ஆண்டில் 78 திட்டங்களுக்கு RM1.825 பில்லியனும் ஒதுக்கப்பட்டதாக துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
இதனிடையே, 2025ஆம் ஆண்டில் 124 திட்டங்களுக்கு RM4.1 பில்லியனும், 2026ஆம் ஆண்டில் 79 திட்டங்களுக்கு RM1.384 பில்லியனும் ஒதுக்கப்பட்டு, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“நான்கு ஆண்டுகளில் ஒதுக்கியுள்ள மிகப்பெரிய தொகை இதுவாகும்.

அதிகளவிலான நிதி ஒதுக்கீடும், கூடுதல் திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்புதலும், பாதிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்களின் மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பே இதன் முக்கிய நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம், பழமையான பள்ளிக் கட்டிடங்களின் பிரச்சனையை கட்டம் கட்டமாகத் தீர்ப்பதில் தொடர்ந்து உறுதியாக இருப்பதை இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன என வோங் குறிப்பிட்டார்.
மாணவர்களின் பாதுகாப்பையும் கல்வித் தரத்தையும் மேலும் மேம்படுத்த அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.







