கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 - மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று நாட்டின் 17 பகுதிகளில் முதல் கட்ட (Tahap 1) வெப்பமான காலநிலை அல்லது எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளது.
அவற்றில் 11 பகுதிகள் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்தவை ஆகும்.
பேராக் மாநிலத்தில் லாருட், மாத்தாங், கோலாகங்சார், காம்பார் மற்றும் பாத்தாங் பாடாங் ஆகிய இடங்களும்;
கிளாந்தான் மாநிலத்தில் கோலா கிராய் பகுதியும்; பகாங் மாநிலத்தில் குவாந்தான், ரவுப், தெமர்லோ மற்றும் பெக்கான் ஆகிய இடங்களும்;
சிலாங்கூர் மாநிலத்தில் உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் ஆகிய இடங்களும் இதில் அடங்கும்.
இதற்கிடையில், சபா மாநிலத்தில் தெலுபிட், தெனோம், சண்டக்கான், பித்தாஸ் மற்றும் பெலூரான் ஆகிய ஐந்து பகுதிகளும், சரவாக் மாநிலத்தில் மாருடி மாவட்டமும் இந்த முதல் கட்ட எச்சரிக்கை நிலையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து குறைந்தது மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் போது இந்த முதல் கட்ட (Tahap 1) எச்சரிக்கை நிலை விடுக்கப்படும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நாடு முழுவதும் நிலவும் தினசரி வெப்ப காலநிலை குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற, பொதுமக்கள் தங்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளப் பக்கத்தைப் ( https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/) பார்வையிடலாம் என்றும் அந்தத் துறை கேட்டுக்கொண்டது.







