புத்ராஜெயா,ஆகஸ்ட் 24 : ஆகஸ்ட் 31 புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறவுள்ள 2026 தேசிய தின அணிவகுப்பில், முதல் முறையாக ஜோகூர் மாநிலத் துணை ராணுவப் படையினர் (JMF - Askar Timbalan Setia Negeri Johor) பங்கேற்கவுள்ளனர்.
அப்படையின் பங்கேற்பு பொதுமக்களை ஈர்க்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமையவிருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இவ்வாண்டு கொண்டாட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான அணிகள் மற்றும் அலங்கார வாகனங்களின் அணிவகுப்புடன், ஜே.எம்.எஃப் (JMF )அணியின் பங்கேற்பும் ஒரு தனித்துவமான சிறப்பம்சமாக அமையும் .
அப்படையினர் அவர்களின் தளவாடங்களுடன் 100 பேர் கொண்ட குழுவாக அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளதாக ஃபஹ்மி கூறினார்.
இன்று புத்ராஜெயா சதுக்கத்தில் பள்ளிக்கூட மாணவர்களின் மனித கிராஃபிக் (human graphic) பயிற்சியைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளைப் போலன்றி, ராணுவம் மற்றும் காவல்துறையின் தற்காப்புத் தளவாடங்கள் அணிவகுப்பில் காட்டுவதோடு நின்று விடாமல், பொதுமக்கள் அவற்றை மிக அருகிலிருந்து பார்ப்பதற்காக 'அலாஃப் பாரு' நினைவுச் சின்னப் (Monumen Alaf Baru) பகுதியில் அவை காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

புத்ராஜெயா சதுக்கத்தில் கொண்டாட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் தற்போது 70 விழுக்காட்டை எட்டியுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் 80 முதல் 90 விழுக்காட்டை எட்டும் என, 2026 தேசிய தினம் மற்றும் மலேசியத் தினக் கொண்டாட்டத்தின் செயற்குழுத் தலைவருமான ஃபஹ்மி கூறினார்.

பொதுமக்கள் கொண்டாட்ட இடத்திற்கு எளிதாக வந்து செல்வதற்காக, ஆகஸ்ட் 30 முதல் 31 வரை எம்.ஆர்.டி (MRT) இரயில் சேவை 24 மணி நேரமும் இயங்கும்.
அது தவிர, மாற்றுப் போக்குவரத்து வசதியாக மூன்றாவது ஆண்டாக இலவச நீர் டாக்ஸி (water taxi) சேவையும் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பார்வையாளர்கள் நாட்டின் நிர்வாக மையத்தின் அழகை ரசிக்க முடியுமென ஃபஹ்மி கூறினார்.







