ஷா ஆலாம், ஆகஸ்ட் 20 - சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS) அதிக மதிப்புள்ள ஆடம்பர வீட்டுத் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், குறைந்த விலை வீடுகளையும் தொடர்ந்து கட்டுமென அறிவித்துள்ளது.
மக்களின் சமூக-பொருளாதாரத் தரத்தை உயர்த்துவதற்காக 62 ஆண்டுகளுக்கு முன்பு PKNS நிறுவனம் தொடங்கப்பட்டதன் நோக்கத்திற்கு ஈடாக அது அமைந்திருப்பதாக , அக்குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மஹ்முத் அப்பாஸ் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம் , பாங்கி போன்ற நகரங்களின் ஆரம்பகால வளர்ச்சியின் போது, கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களில் வந்து குடியேறுவதற்கு வசதியாக PKNS குறைந்த விலை வீடுகளை கட்டியதை அவர் நினைவு கூர்ந்தார்.
தற்போதும் அவர்கள் குறைந்த விலை வீடுகளைக் கட்டி வந்தாலும், சந்தையில் அதிக மதிப்புள்ள பெரிய வீட்டுத் திட்டங்களே மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கின்றன.
இந்த ஆடம்பர வீட்டுத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தைக் கொண்டே குறைந்த விலை வீடுகளுக்கான கட்டுமானச் செலவை PKNS ஈடுகட்டுகிறது.
ஏனெனில், அவர்கள் கட்டும் ஒவ்வொரு குறைந்த விலை வீட்டுக்கு தலா 50,000 ரிங்கிட் மானியம் தேவைப்படுகிறது.
இந்த மானியத் தொகை ஆடம்பர வீடுகளின் லாபத்தில் இருந்தே பெறப்படுகிறது.
மக்களின் சமூக-பொருளாதாரத்தை உயர்த்துவது என்பது வெறும் வீடுகளை வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்கள் வருமானம் ஈட்டுவதற்கும் வணிகங்களை உருவாக்குவதற்கும் வாய்ப்பளிப்பதையும் உள்ளடக்கியது என்று அவர் குறிப்பிட்டார்.
ஷா ஆலாமில் உள்ள அனேகா வாக் (Aneka Walk) போன்ற வணிக இடங்கள், மக்கள் வியாபாரம் செய்வதற்கும் தொழில்முனைவோராக வளர்வதற்கும் ஏற்ற சூழலை வழங்குகின்றன.
இந்த சமூக-பொருளாதார மேம்பாடு மக்கள் இன்னும் சிறந்த வீடுகளைப் பெறவும், தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்கவும் உதவும் என்று அவர் ஷா ஆலாமில் நடைபெற்ற 'Temasya Aneka 2026' தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களிடம் தெரிவித்தார்.








