ஷா ஆலம், ஆகஸ்ட் 9 : 831 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டு வரும் காபார் மருத்துவமனை அடுத்த ஆண்டு மார்ச் 26-ஆம் தேதிக்குள் தயாராகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
312 படுக்கை வசதிகள் கொண்ட அந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தற்போது திருப்திகரமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன.
அதோடு,திட்டமிடப்பட்ட கால அட்டவணையையும் அது நெருங்கி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சுகாதார அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹஸ்னோல் ஜாம் ஜாம் அஹ்மாட், அண்மையில் காபார் மருத்துவமனையின் கட்டுமானத் தளத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
அந்த வருகையின் போது, பொதுப்பணித்துறை, சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து அவருக்கு விளக்கமளித்தனர்.
அந்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் சுகாதார அமைச்சின் துணை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அஸ்மான் யாகோப், சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் உம்மி கல்தோம் ஷம்சுதின் மற்றும் பொதுப்பணித்துறையின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து அக்கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டதோடு, கூடுதல் நிதித் தேவை குறித்தும் அந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
மேலும், மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு தேவையான மனிதவளத் திட்டமிடல், பணியாளர் பணியிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்வதன் தற்போதைய நிலை குறித்தும் பேசப்பட்டது.







