
செப்பாங், ஆகஸ்ட் 9 : 2026-ஆம் ஆண்டு சிலாங்கூர் சுக்மா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் தினசரி 100 ரிங்கிட் கூடுதல் ஊக்குவிப்புத் தொகையைப் பெறுவார்கள்.
அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் மாநில அரசாங்கம் அத்தொகையை வழங்குவதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி அறிவித்தார்.
அந்தத் தொகை உணவு மற்றும் பணிக்கான அலவன்சையும் உட்படுத்தியுள்ளது. அத்தொகையுடன் சேர்த்து தன்னார்வலர்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் 100 ரிங்கிட் போக்குவரத்து அலவன்சும், 10,000 ரிங்கிட் வரையிலான காப்பீட்டுப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தன்னார்வலர்களுக்கு ஆடைகளும் அங்கீகார அட்டைகளும் வழங்கப்படும் என்றாரவர்.
செப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தில் (SIC) நடைபெற்ற 2026 சுக்மா தீப ஓட்டத்தின் நிறைவு விழா மற்றும் தன்னார்வலர்களின் மாபெரும் ஒன்றுகூடடல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிலாங்கூர் மாநிலம் மீண்டும் சுக்மா போட்டிகளை நடத்துவதால், மாநிலத்தின் நற்பெயரைக் காப்பதில் தன்னார்வலர்களின் பங்கு மிக முக்கியமானது என்று அமிருதின் கூறினார்.
தன்னார்வலர்கள் போட்டிகளைச் சீராக நடத்த உதவுவதுடன், நாடு முழுவதிலுமிருந்து வரும் விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்கும் சிலாங்கூர் மக்களின் பிரதிநிதிகளாகத் திகழ்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இம்முறை பெறப்பட்ட 30,000 விண்ணப்பங்களில் இருந்து 10,000 தன்னார்வலர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தன்னார்வலர்களின் நடமாட்டத்தையும் நலனையும் கண்காணிக்க ஒரு பொறுப்பதிகாரி அல்லது மாநில செயற்குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டு, அது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் மந்திரி பெசார் தெரிவித்தார்.










