ஷா ஆலாம், ஆகஸ்ட் 8: பன்னாட்டுத் தரம் வாய்ந்த நிறுவனங்களை உருவாக்குவதற்கு, சிறு,நடுத்தர தொழில்துறையினர் (PKS) தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டுமென சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறினார்.
இந்தத் தொழில்முனைவோர் அனைத்துலக சந்தையில் ஊடுருவக்கூடிய திறன் கொண்டவர்கள் என்றும், அதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக மாற முடியும் என்றும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
இருப்பினும், நிதியுதவி, டிஜிட்டல் மயமாக்கல், கண்டுபிடிப்பு மற்றும் மாநில அரசின் தொடர்ச்சியான ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான தொழில்முனைவோர் மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் மட்டுமே இந்த லட்சியத்தை நனவாக்க முடியும் என்று அவர் விளக்கினார்.
நேற்று நடைபெற்ற, 1,000-க்கும் மேற்பட்ட 'பிளாட்பார்ம் சிலாங்கூர்' (PLATS) தொழில்முனைவோரை ஒன்றிணைத்த 'பிளாட்பார்ம் சிலாங்கூர் விருது விழாவில்' (MAPS) அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உருவாக்கப்பட்ட PLATS, தற்போது அதன் ஆரம்பகால இணைய விற்பனைத் தளம் என்ற செயல்பாட்டைத் தாண்டி வெகுதூரம் வளர்ச்சியடைந்துள்ளது என்று அமிருடின் கூறினார்.
PLATS இப்போது வழிகாட்டுதல், வணிக டிஜிட்டல் மயமாக்குதலை விரைவுபடுத்துதல் என ஒரு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனமாக மாறியுள்ளது.
"கோவிட்-19 பெருந்தொற்றின் போது, டிஜிட்டல் மயமாக்கல் மூலம் நிரப்பப்பட வேண்டிய இடத்தை நாங்கள் கண்டோம். ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில், PLATS-இன் வளர்ச்சி மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது."இது ஒரு வலைப்பின்னலாகத் ( Network) தொடங்கி, பின்னர் டிஜிட்டல் தளமாக, வழிகாட்டுதல் மையமாக மற்றும் தொழில்முனைவோர் வெற்றியை அடைய உதவும் ஒரு நிறுவனமாக வளர்ந்துள்ளது," என்று அவர் கூறினார்.
தற்போது 100,000-க்கும் அதிகமான தொழில்முனைவோரைக் கொண்டுள்ள PLATS, சிலாங்கூர் மாநிலத்தின் தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பின் வலிமையை நிரூபிக்கிறது.
"இதற்கு முன்பு சுமார் 37,000 தொழில்முனைவோர் மட்டுமே இருந்தனர், ஆனால் இப்போது இந்த வலைப்பின்னல் 100,000 தொழில்முனைவோரைத் தாண்டியுள்ளது. இது சிறிய எண்ணிக்கையல்ல."இந்த வலைப்பின்னல் ஒன்றிணைந்தால், இது போட்டி பற்றியது அல்ல, மாறாக ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, மாநில பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பெரிய சக்தியாக மாறும்," என்று அவர் கூறினார்.








