ஷா ஆலாம், ஜூலை 7 - சிலாங்கூரின் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும் திட்டத்தின் (SREP) கீழ், வேலை இழந்த 5,000 நபர்கள் சுயதொழில் மூலம் புதிய வருமானத்தை ஈட்டுவதற்கு உதவும் நோக்கில் 'பிளாட்ஸ் தொழில்மாற்றத் திட்டம்' (PLATS Career Transition) அடுத்த மாதம் முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தகுதியான பயனாளர்களை அடையாளம் காண்பதற்காகச் சமூகப் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து (SOCSO) தரவுகள் பெறப்பட்டு வருவதாகவும் எம்பிஐ அறக்கட்டளையின் தலைவர் அகமட் அஸ்ரி ஜைனால் நோர் தெரிவித்துள்ளார்.
வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள், குறிப்பாக தங்களின் 40-துகளில் புதிய தொழிலைத் தொடங்கி தங்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்க விரும்பும் நபர்களுக்கு இத்திட்டம் முக்கியக் கவனம் செலுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு RM4 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் இணையும் பங்கேற்பாளர்களுக்கு வெறும் நிதியுதவி மட்டும் வழங்கப்படாமல், அவர்கள் தங்களுடைய சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்குத் தேவையான அடிப்படை வணிக உத்திகள் மற்றும் பயிற்சிகளும் கற்றுத்தரப்படும்.







