கோலாலம்பூர், ஜூலை 31 - மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள தசை மற்றும் எலும்பு தொடர்பான (மஸ்குளோசுக்கிலட்டல்) வலிகளுக்காகத் தொடர் மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொடர் சிகிச்சைக்கு முன்பாக மாமன்னர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, புத்ராஜெயா, டத்தாரான் பஹ்லவான் நெகாராவில் இன்று (ஜூலை 31) நடைபெற்ற தேசிய மாவீரர் தின அணிவகுப்பு விழாவிற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் கலந்துகொள்ளவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான தேசிய மாவீரர் தின அணிவகுப்பு விழா இன்று காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடீன் நாசுட்டின் இஸ்மாயில், பாதுகாப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் காலித் நோர்டின், படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டத்தான் ஸ்ரீ மாலிக் ரசாக் சுலைமான் மற்றும் காவல்துறைத் தலைவர் டத்தான் ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.







