தொக்யோ, ஜூலை 28 - ஜப்பானின் தெற்கு குமாமோட்டோ மாகாணத்தில் இன்று (ஜூலை 28 ) 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது, சாலைகள் பிளந்தன, மேலும் இடிந்து விழுந்த வணிக வளாகத்திற்குள் சிலர் சிக்கிக் கொண்டனர்.
இவ்வேளையில், சிலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
தொக்யோவில் உள்ள தமது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி, ஒரு தசாப்தத்திற்கு முன்பு இதே பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள முழுமையான சேதங்களை அதிகாரிகள் இன்னும் மதிப்பிட்டு வருவதாகக் கூறினார்.
"மக்கள் காயமடைந்துள்ளதாக எங்களுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. சில பகுதிகளில் மின்தடையும் தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன, மேலும் சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன, கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன" என்று தகைச்சி கூறினார்.
"பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுவது உட்பட, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்."சுமார் 3 லட்சம் மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வுகள் தொடர்ந்து நீடிப்பதால், பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவ 3,600 வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று தகைச்சி கூறினார்.
ஒரு மருத்துவமனையில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஒளிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் போது அதிவேக ரயிலில் பயணம் செய்த பலரும் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிவிபத்தில் இயோன் (Aeon) வணிக வளாகத்திற்குள் மக்கள் பலர் சிக்கிக்கொண்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் "சிலர்" இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுவதாக டிபிஎஸ் (TBS) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிவிபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் இயோன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.










