கரகாஸ்,ஜூலை 5; கடந்த வாரம் வெனிசுலாவை உலுக்கிய இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,954-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 16,592 பேர் காயமடைந்துள்ளனர் என வெனிசுலா தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.
தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய மாநிலங்களான அராகுவா (Aragua), மிராண்டா (Miranda) மற்றும் லா குவைரா (La Guaira), மற்றும் மேற்கு மாநிலங்களான கராபோபோ (Carabobo), யாராகுய் (Yaracuy) மற்றும் பால்கான் (Falcon) ஆகிய பகுதிகளில் இந்த பேரிடர் தாக்கிய பின்னர் 6,462 பேர் மீட்கப்பட்டதாக ரோட்ரிக்ஸ் கூறினார்.
இந்த புதிய அறிவிப்பின்படி, 16,209 மக்கள் வீடற்ற நிலையில் உள்ளனர், 856 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன மற்றும் 190 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக அதிகாரிகள் 80 தற்காலிக முகாம்களையும் அமைத்துள்ளனர்.
சனிக்கிழமை நிலவரப்படி, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களைத் தேடும் பணியில் 29,567 மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டைச் சேர்ந்த 3,281 பேரும் அடங்குவர்.
ஜூன் 24-ஆம் தேதியன்று இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கியதைத் தொடர்ந்து, வெனிசுலாவில் 942 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.







