கோலாலம்பூர், ஜூலை 28 ; கோலாலம்பூர், ஜாலான் புக்கிட் பெட்டாலிங்கில் உள்ள ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணைய (UNHCR) அலுவலகத்தின் முன் முகாமிட்டு தங்கியிருந்த நூற்றுக்கும் அதிகமான ரோஹிங்கியா சமூகத்தினர், கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
ஆவணங்கள் மற்றும் அடையாளங்களைச் சரிபார்க்கும் நடைமுறைக்காக அவர்கள் போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சூஸ் உறுதிப்படுத்தினார்.
ஆரம்பத்தில் இரு லாரிகளின் மூலம் அவர்களை ஏற்றிச் செல்ல முடிவெடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அகதிகளில் பெரும்பாலோர் தங்களது பொருட்களையும் உடன் எடுத்து வந்ததால், இரு லாரிகள் போதாமல் போனது.
அதையடுத்து இரவு 8.20 மணிக்கு நான்கு போலீஸ் லாரிகளைப் பயன்படுத்தி அவர்கள் அனைவரையும் இடமாற்றம் செய்யும் நடவடிக்கை தொடங்கியது.
அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முன், இந்த ரொஹிங்கிய சமூகத்தினர் அனைவரும் அடையாளச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
முறையான அடையாள ஆவணங்கள் இல்லாதவர்கள் தடுத்து வைக்கப்படுவர். ஆவணங்கள் வைத்திருப்பவர்கள், உண்மையிலேயே அகதிகள் என்பதை உறுதிச் செய்ய, ஐநா அகதிகள் அமைப்புடன் அவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்படுமென டத்தோ ஃபாடில் மர்சூஸ் தெரிவித்தார்.
பினாங்கில் உள்ள தங்களது குடியிருப்புகளில் இருந்து உள்ளூர் மக்களால் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அகதிகள் குழுவினர் நேற்று அதிகாலை மூன்று பேருந்துகள் மூலம் தலைநகரை வந்தடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.








