ஹுலு லங்காட், ஜூலை 5 - ஹுலு லங்காட்டில் உள்ள கம்போங் பாரு சுங்கை மக்காவ் (Kampung Baru Sungai Makau) பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுமையாக இடித்து அழிக்கப்பட்டது.
நிலத்தின் உரிமையாளர் தற்போது அந்த இடத்தை சுத்தம் செய்து, கட்டிட இடிபாடுகளை அகற்றி வருவதாக ஹுலு லங்காட் மாவட்ட அதிகாரி டத்தோ முகமட் ஜுஸ்னி ஹாஷிம் தெரிவித்தார்.
இந்த குடியிருப்பில் இருந்து ரோஹிங்கியா சமூகத்தினர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். எனினும், கட்டிடங்கள் அப்படியே இருந்ததால், நில உரிமையாளருடன் இணைந்து இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இனிவரும் காலங்களில் அப்பகுதியில் அனுமதியின்றி புதிய கட்டிடங்கள் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அவ்வப்போது கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே அப்பகுதியை விட்டு வெளியேறியவர்கள் வேறு இடங்களுக்கு மாறக்கூடும். அவர்களின் புதிய குடியிருப்பாக மாற வாய்ப்புள்ள இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றாரவர்.
எனினும், ரொஹிங்கியா சமூகத்தினர் ஐநாவுக்கான அகதிகள் ஆணையத்தின் (UNHCR) அட்டை வைத்திருப்பவர்கள் என்பதால், இந்த விவகாரம் கூட்டரசு போன்ற உயர்மட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்," என்றும் ஜுஸ்னி கூறினார்.





