கோலாலம்பூர், ஜூலை 27 - கடந்த ஜூலை 25ஆம் தேதி பெந்தோங், ஜாலான் காராக் லாமா பகுதியில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் உயிரிழந்தவர்களில் நால்வரின் குடும்பத்தினருக்குச் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (பெர்கசோ - PERKESO) மூலம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
விபத்தில் உயிரிழந்த வி. முகிலன், ஏ. கணபதி ராஜா, கே. உலகநாதன் மற்றும் எம். பரதன்மன் ஆகிய 16 முதல் 25 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களின் குடும்பத்தினர் 'லிண்டோங் 24 ஜாம்' (LINDUNG 24 Jam) மற்றும் ஊனமுற்றோர் திட்டங்களின் மூலம் உதவியைப் பெறத் தகுதி பெற்றுள்ளதாக பெர்கேசோ தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் 1969ஆம் ஆண்டு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் (சட்டம் 4) கீழ் பங்களிப்புச் செய்து வந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்கு நிதியாகத் தலா 3,000 ரிங்கிட் ஒருமுறை வழங்கும் தொகையும் கிடைக்கவுள்ளது. இதில், முகிலனின் குடும்பத்தினருக்கு மாதாந்திர ஊனமுற்றோர் ஓய்வூதியமாக 562 ரிங்கிட் 50 சென் வழங்கப்படவுள்ளது.
இந்தத் தொகை அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதிலும், அவரது இரண்டு வயதுக் குழந்தைக்கு 21 வயது வரை அல்லது முதல் பட்டப்படிப்பு முடிக்கும் வரை வழங்கப்படும்.
இதேபோல், உலகநாதனின் குடும்பத்தினருக்கும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. அவரது பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் 564 ரிங்கிட் 36 சென் வழங்கப்படும் நிலையில், அவரது உடன்பிறப்புகளுக்கு அவர்கள் 21 வயதை எட்டும் வரை இந்த நிதி உதவி கிடைக்கும்.
மேலும், கணபதி ராஜா மற்றும் பரதன்மன் ஆகியோரின் குடும்பத்தினர் 'லிண்டோங் 24 ஜாம்' திட்டத்தின் கீழ் சார்ந்தோர் நலனுக்கான பலன்களைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
கணபதி ராஜாவின் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் இந்த உதவி கிடைக்கும் அதேவேளையில், 21 வயதுக்குட்பட்ட அவரது உடன்பிறப்புகளுக்கு 1,647 ரிங்கிட் தொகையாக வழங்கப்படவுள்ளது. பரதன்மனின் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளை உள்ளடக்கிய அவரது குடும்பத்தினருக்கு மாதந்தோறும் 891 ரிங்கிட் சார்ந்தோர் நல நிதி வழங்கப்படும்.
அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள மொத்த நிதி உதவி 900,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக இருக்கும் எனப் பெர்கசோ மதிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்த மற்ற மூன்று பேருக்கு செயலில் உள்ள பங்களிப்புப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும், மற்றொருவருக்கு பங்களிப்புப் பதிவே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. அதனால், அவர்கள் சட்டம் 4-இன் கீழ் உள்ள சலுகைகளைப் பெறத் தகுதியற்றவர்கள் என பெர்கசோ கூறியது.
வேலை நேரத்திற்கு வெளியே விபத்துகள் நிகழும்போதும் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே 'லிண்டோங் 24 ஜாம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.
சமூகப் பாதுகாப்பால் இத்தகைய துயரங்களுக்குப் பிறகு குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று பெர்கசோ குறிப்பிட்டுள்ளது.
மேலும், தொழிலாளர்களும் வேலை வழங்குநர்களும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகளை எப்போதும் புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சாலைப் பயனர்கள் அனைவரும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என்றும் பெர்கசோ கேட்டுக் கொண்டுள்ளது.







