கோலாலம்பூர், ஜூலை 4: மலேசியாவில் 'லிண்டோங் 24 ஜாம்' (LINDUNG 24 Jam) எனப்படும் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்ட ஒரே மாதத்திற்குள், காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ (PERKESO) 12 லட்சத்திற்கும் அதிகமான ரிங்கிட் நிதியுதவியை வழங்கியுள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே மொத்தம் 592 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக, உள்வைப்புச் செலவுகளுக்காக (Implant Cost) 11 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டும், அதனைத் தொடர்ந்து தற்காலிக ஊனமுற்றோர் உதவித்தொகையாக (FHUS) 99,269 ரிங்கிட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சராசரியாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 வழக்குகள் பதிவாகி வருவதாகக் குறிப்பிட்ட பெர்கேசோ, இது மலேசியாவில் நிலவி வரும் சமூகப் பாதுகாப்பு இடைவெளிகளைக் களைவதற்கான தங்களின் தீவிர முயற்சியை வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளது.
முன்னதாக, வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட நேரங்களில் ஏற்படும் விபத்துகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த 'லிண்டோங் 24 ஜாம்' திட்டத்தின் மூலம் அந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.
இதன் மூலம் சமூகப் பாதுகாப்பானது, வேலைக்குச் சென்று வரும் நேரத்தையோ அல்லது வேலை செய்யும் இடத்தையோ மட்டும் சார்ந்திருக்காமல், தொழிலாளர்கள் தங்களின் வீடுகளில் இருக்கும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கும் விரிவான பாதுகாப்பை வழங்குகிறது.
மேலும், இந்த 'லிண்டோங் 24 ஜாம்' திட்டத்தின் நன்மைகள் குறித்து அதிகமானோர் விழிப்புணர்வு பெறுவதை உறுதி செய்யவும், வேலை நேரத்திற்கு வெளியிலும் எந்தவொரு தொழிலாளரும் பாதுகாப்பு கிடைக்காமல் விடுபட்டுவிடக் கூடாது என்பதிலும் பெர்கேசோ உறுதியாக உள்ளது.







