பெந்தோங், ஜூலை 25: பகாங், காராக், கம்போங் ஜம்பு ரியாஸ் (Kampung Jambu Rias) அருகே, கோலாலம்பூர் - காராக் சாலையின் 86-வது கிலோமீட்டரில் காரொன்று லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த ஆறு நண்பர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வளைவான மலைப்பாங்கான பகுதியைக் கடக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலது பக்கத்தில் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது. அதன் விளைவாக, அந்த கார் எதிரே வந்த லாரியுடன் மோதியதில் காரின் ஓட்டுநர் மற்றும் ஐந்து பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என பகாங் மாநிலத்தின் இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்தார்.
அந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் காரின் ஓட்டுநரான வி. முகிலன் (25); கே. தினேஷ்வரன் (22); கே. அழகநாதன் (21); ஏ. கணபதி ராஜா (19); கே. சசி குமார் (17); மற்றும் எம். பரந்தாமன் (16) என போலீஸ் அடையாளம் கண்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தெமர்லோ சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா (HOSAS )மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
அந்த விபத்தில் 31 வயதுடைய லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார். அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக, இந்த விபத்து 1987 போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.







