ஷா ஆலாம், ஜூலை 22 — நேற்று இரவு புஞ்சாக் ஆலாம், எக்கோ கிராண்டியர் (Eco Grandeur) நோக்கிய ஜாலான் பெர்சியாரான் மொக்தார் தகாரி சிக்னல் சந்திப்பில், சிவப்பு விளக்கில் நின்றுகொண்டிருந்த லாலாமூவ் (Lalamove) டெலிவரி ஊழியரின் மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
வாகனம் ஒன்றின் 'டாஷ்கேம்' (Dashcam) கேமராவில் பதிவானக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
அதில், சிவப்பு விளக்குக்காகக் காத்திருந்த அந்த நபர் மீது பின்னால் இருந்து வந்த கார் அதிவேகமாக மோதுவதும், அதனால் அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்படுவதும் பதிவாகியுள்ளது.
சமூக ஊடகப் பதிவுகளில், பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுவதோடு, பலரும் அவரது குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
வைரலான காணொளி கருத்துப் பகுதியில், வெளிநாட்டவர் ஒருவர் ஓட்டி வந்த அந்தக் கார், சிவப்பு விளக்கை மதிக்காமல் அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை உயிரிழந்தவரின் அடையாளம், விபத்துக்கான காரணம் அல்லது உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலையும் வெளியிடவில்லை.







