கோம்பாக், ஆகஸ்ட் 30: கோம்பாக் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மெஸ்ரா ராக்யாட் திட்டம், மேலும் பல சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இதனை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இதன் மூலம், அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் தகவல்கள், சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை மக்கள் நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இந்த மெஸ்ரா ராக்யாட் திட்டத்தில் மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளுடன் தனியார் நிறுவனங்களும் ஒரே இடத்தில் இணைந்து செயல்படும்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு சேவை மையங்களுக்குச் சென்று பொதுமக்கள் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன், அரசாங்கத்துக்கும் சமூகத்தினருக்கும் இடையே இருவழித் தொடர்பை வலுப்படுத்துவதிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிப்பதாக அமிருடின் தெரிவித்தார்.
அடுத்த ஓராண்டு காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சிலாங்கூர் முழுவதும் படிப்படியாக முன்னெடுக்கப்படும்.
இதுபோன்ற திட்டங்கள், அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







