நிலாய், ஜூலை 11 : பள்ளிகள் தங்கள் நற்பெயரைக் காப்பதற்காக பகடிவதைச் (bullying) சம்பவங்களை மறைக்கக் கூடாது . பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் இப்பிரச்சனைக்குத் திறம்பட தீர்வு காணவும் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம் என பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
சிலர் பகடிவதையை ஒரு சிறிய பிரச்சினையாகக் கருதலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் ஆழமானது.
பள்ளிகள் தங்களின் நற்பெயரைக் காப்பதற்காக இத்தகைய சம்பவங்களை மூடிமறைக்க முயல்வதை ஏற்றுக் கொள்ள இயலாது என பிரதமர் குறிப்பிட்டார்.
1,000 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில் இரு பகடிவதை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டால், அதற்காக அந்தத் தலைமையாசிரியரையோ அல்லது முதல்வரையோ குற்றம் சாட்டக் கூடாது.
சம்பவத்தைப் புகாரளித்ததற்காக அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை, ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சம்பவத்தை மறைத்தால் மட்டுமே அவர்கள் செய்வது தவறாகுமென என கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் பங்கேற்ற பண்டார் என்ஸ்டெக் (Bandar Enstek) நிகழ்ச்சியில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
கடந்த காலத்தை விட தற்போது சமயக் கல்விக்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தபோதிலும், பகடிவதைச் சம்பவங்கள் தொடர்வது மாணவர்களிடையே நற்பண்புகளையும் தார்மீக விழுமியங்களையும் வளர்ப்பதில் உள்ள குறைபாடுகளைப் பிரதிபலிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
கல்வி என்பது கல்வி ரீதியாகச் சிறந்த பட்டதாரிகளையோ அல்லது தொழில்நுட்பத் திறன் கொண்ட நிபுணர்களையோ உருவாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது; மாறாக, மனித விழுமியங்களைப் புரிந்துகொண்டு மற்றவர்களை மதிக்கும் நபர்களை அது உருவாக்க வேண்டும்.
அதோடு,கல்வி நிறுவனங்கள் வலுவான நம்பிக்கை, நல்ல தார்மீக விழுமியங்கள் மற்றும் பிறர் மீது இரக்கம் கொண்ட தலைமுறைகளை உருவாக்கும் கற்றல் இடங்களாகத் திகழ்வதை உறுதி செய்வதில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என்று அன்வார் கூறினார்.







