கிள்ளான், 13 ஜூலை – ஷா ஆலாம் வழித்தட இலகு ரயில் போக்குவரத்து 3 (LRT3) சேவையின் எஞ்சிய 5 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகளும் நிறைவடைவதைக் காண தாம் மிகுந்த ஆவலுடன் இருப்பதாகச் சிலாங்கூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.
துரோபிகானா (Tropicana), தெமாஸ்யா (Temasya), ராஜா மூடா (Raja Muda), புக்கிட் ராஜா (Bukit Raja) மற்றும் பண்டார் பொட்டானிக் (Bandar Botanik) ஆகிய 5 நிலையங்களின் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் வசதிக்காக எல்ஆர்டி 3 திட்டத்தின் முழு வழித்தடமும் அதன் அசல் திட்டமிடலின் அடிப்படையில் முழுமையாக முடிக்கப்பட்டால் மிக சிறப்பாக இருக்கும் என்று சுல்தான் விவரித்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான கட்டுமானக் காலத்தில், தங்களின் தனித்துவமான திறன்களையும் அர்ப்பணிப்பையும் வழங்கி இந்தத் திட்டத்திற்காக உழைத்த 13,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் சுல்தான் ஷாராபுடின் வெகுவாகப் பாராட்டினார்.
மேலும், எல்ஆர்டி 3 ரயில் சேவையின் செயல்பாடுகள் சீராக இருப்பதை உறுதி செய்வதோடு, பயனர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பிரசரானா மலேசியா பெர்ஹாட் (Prasarana) நிறுவனம் கவனித்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் இந்த ரயில் சேவையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு நவீன, மற்றும் தரமான போக்குவரத்து கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான அம்சமாக அமையும் என சிலாங்கூர் சுல்தான் குறிப்பிட்டார்.







