ஷா ஆலம், ஜூலை 10: தேசிய முன்னணி உடனான போட்டி கடுமையாக இருந்தாலும், நாளை நடைபெறவுள்ள 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தல் வரை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கான வாக்காளர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரத்தின் முதல் வாரத்திலிருந்தே மக்களின் ஆதரவைப் பெறுவதில் ஹரப்பான் மற்றும் தேசிய முன்னணி ஆகிய இரு கூட்டணிகளும் கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளதாக கெஅடிலானின் தேர்தல் இயக்குனர் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
"போட்டி இன்னும் கடுமையாகவே உள்ளது. முதல் வாரத்திலிருந்தே, ஹரப்பான் மற்றும் தேசிய முன்னணி ஆகிய இரு தரப்பும் ஒருவரையொருவர் முந்திச்செல்லும் வகையில் போட்டி நிலவி வருகிறது.
இருப்பினும், குறிப்பாக கடந்த சில இறுதி நாட்களில் மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு நமக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது," என்று நேற்று இரவு தாமான் பெலாங்கி இண்டா பொதுத் திடலில் நடைபெற்ற, புத்ரி வாங்சா சட்டமன்றத் தொகுதி பிரச்சாரக் கூட்டத்திற்குப் பிறகு அவர் சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.
ஹரப்பான் கூட்டணிக்கான இந்த ஆதரவு அலை வாக்குப்பெட்டிகளின் முடிவுகளில் பிரதிபலிக்கும் என்று தாம் நம்புவதாகவும் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவருமான அமிருதின் குறிப்பிட்டார்.
நாங்கள் முன்வைத்துள்ள தேர்தல் அறிக்கை மற்றும் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான இணக்கமான தொடர்ச்சி ஆகியவற்றில் மக்கள் ஈர்க்கப்பட்டால், இந்த முறை ஜோகூருக்கான சிறந்த தேர்வாக பக்காத்தான் ஹராப்பான் இருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் மொத்தம் 27 லட்சத்து 27 ஆயிரத்து 926 வாக்காளர்கள், 1,140 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இத்தேர்தலில், 56 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றுவதற்காக மொத்தம் 172 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.






