ஷா ஆலாம், 10 ஜூலை - சமூகப் பாதுகாப்பு அமைப்பின் சொக்சோ புள்ளிவிபரப்படி, கடந்த ஜூன் 12-ஆம் தேதி வரையில் 42,800-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.
கடந்த மாதம் வரை நாடு முழுவதும் 42,807 தனிநபர்கள் வேலை இழந்துள்ளதாக சொக்சோ பதிவு காட்டுவதாக மனிதவள அமைச்சு மக்களவையில் தெரிவித்தது.
இதே காலகட்டத்தில், சொக்சோ அமைப்பு 'லிண்டுங் கெர்ஜெயா' (LINDUNG Kerjaya) திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 123 பலன் கோரிக்கைகளுக்கு (Benefit Claims) ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த ஒப்புதல்கள் RM248.23 மில்லியன் தொகையை உட்படுத்தியது என அவ்வமைச்சு தெரிவித்தது.
உற்பத்தித் துறையில்தான் மிக அதிகப்படியான வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன. இத்துறையில் 8,702 வேலை இழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இது ஒட்டுமொத்த வேலை இழப்பில் 20.7 சதவீதமாகுமென அவ்வமைச்சு குறிப்பிட்டது.
இதனிடையே, வேலை இழந்த 56,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதை இலக்காகக் கொண்டு 'பேஸ்' (PACE - Progressive Acceleration for Capability and Employment) பொருளாதார மீட்சித் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவ்வமைச்சு கூறியது.
மேலும், லிண்டுங் கெர்ஜெயா திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் மற்றும் அவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கும் RM580 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 24 வரை, காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்களில் மொத்தம் 2,697 பேர் தங்களது திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளில் பங்கேற்க ஒப்புதல் பெற்றுள்ளனர்.
ஜனவரி முதல் மே 31 வரையிலான கால கட்டத்தில் , சொக்சோ நாடு முழுவதும் தினசரி மற்றும் வாராந்திர நேர்காணல் உட்பட 2,989 தொழில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியுள்ளது. இம்முகாம்கள் 86,594 வேலை தேடுபவர்களை ஈர்த்துள்ளன என மனிதவள அமைச்சு தெரிவித்தது.






