கோலாலம்பூர், ஜூலை 9 - 24 மணி நேர பாதுகாப்பை வழங்கும் சொக்சோவின் LINDUNG 24 JAM வேலையிட விபத்து அல்லாத திட்டம், இனி உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டாயமில்லை. இனி அத்திட்டம் தன்னார்வ முறையில் அமல்படுத்தப்படும்.
இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.
எனினும், இந்த LINDUNG 24 JAM திட்டம் அந்நிய நாட்டு ஊழியர்களுக்கு தொடர்ந்து கட்டாயமாக்கப்படுமென மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
LINDUNG 24 JAM திட்டத்துக்கான ஊழியர்களின் பங்களிப்பு இனி கட்டாயமல்ல என நேற்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
உடனடியாக அமலுக்கு வந்த அந்த முடிவின் கீழ், ஊழியர்களின் சம்பளத்தில் 0.75 விழுக்காடு பங்களிப்பு இனி தன்னார்வ முறையிலே நடைமுறைப்படுத்தப்படும்.
கடந்த ஜூன் முதல் அமலுக்கு வந்த LINDUNG 24 JAM திட்டம் தங்களுக்கு சுமையாக அமைந்திருப்பதாகவும், அது கட்டாயமாக்கப்பட்டிருக்கக் கூடாது என சொக்சோ பங்களிப்பாளர்கள் உட்பட பல தரப்பினர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
வேலையிடத்துடன் தொடர்பில்லாத மற்றும் வேலை நேரத்துக்கு அப்பால் நிகழும் விபத்துகள் ஏற்பட்டால், ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக , சொக்சோ LINDUNG 24 JAM திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.
இத்திட்டத்தை ஒரு தரப்பினர் வரவேற்றுள்ள நிலையில், முழு பங்களிப்புத் தொகையையும் ஏன் ஊழியர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் ? முதலாளிமார்கள் ஏன் அந்த தொகையைப் பகிர்ந்து கொள்ளவில்லை என ஒரு தரப்பினர் கேள்வியெழுப்பி இருந்தனர்.






