செப்பாங்,ஜூலை 7 - ஜேபிஜே (JPJ) சாலைப் போக்குவரத்துத் துறை , கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் 2-இல், சில உரிமம் பெற்ற இ-ஹெய்லிங் (e-hailing) ஓட்டுநர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ முன்பதிவு செயலிகளைப் பயன்படுத்தாமல், சுற்றுலாப் பயணிகளிடம் அநியாயக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
'Ops Ulat' என்ற தீவிர அமலாக்க நடவடிக்கையின் போது அது கண்டறியப்பட்டது.
இந்த ஓட்டுநர்கள், குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை நேரடியாக அணுகி, அதிகாரப்பூர்வ செயலிகளைப் பயன்படுத்தாமல் தங்களின் நேரடிச் சேவைகளை வழங்குகிறார்கள் என JPJ பொது இயக்குநர் டத்தோ அயிடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.
ஓரிடத்துக்கு எப்படிச் செல்வது என்று தெரியாத சுற்றுலாப் பயணிகளின் அறியாமையை, இந்த ஓட்டுநர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து ஏமாற்றுகிறார்கள்.
கோலாலம்பூருக்குச் செல்வதற்கான வழக்கமான டாக்சி கட்டணம் RM65 முதல் RM80 வரை மட்டுமே இருக்க வேண்டும்.
எனினும், உண்மை கட்டண விபரம் தெரியாத வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள், RM500-லிருந்து RM800 வரை செலுத்த கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள், மலேசியாவை குறைகூறச் செய்கின்றனர் என டத்தோ அயிடி ஃபட்லி ரம்லி கூறினார்.
முன்னதாக தங்களது அதிகாரிகளையும், வெளிநாட்டவர்களையும் வழக்கமான பயணிகள் போன்று அனுப்பி வைத்து, சுற்றுலாப் பயணிகளைச் சுரண்டும் ஓட்டுநர்களைப் பிடிக்கச் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சிறப்பு அமலாக்க நடவடிக்கையின் போது, JPJ அதிகாரிகள் மொத்தம் 59 வாகனங்களைச் சோதனை செய்து, அதில் விதிமீறல்களில் ஈடுபட்ட 54 வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தனர்.







